ஓட்டப்பிடாரம், ஜூன் 26: தொகுதி வளர்ச்சி நிதியினை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கே பயன்படுத்துவேன் என ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தெரிவித்தார். ஓட்டபிடாரம் யூனியன் அலுவலகத்தில் மக்களின் குடிநீர் பிரச்னைகள், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் அதனை சரி செய்வது சம்பந்தமாக ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சிகளின் செயலாளர்களுடன் சண்முகையா எம்எல்ஏ நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். பின்னர்அவர் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தற்போது குடிநீர் கிடைக்காமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதிலும் பல்வேறு குறைகளை அறிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சிகளின் செயலாளர்கள் இணைந்து மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.