கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, ஜூன் 26: கோவில்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஸ்கேனர் முறையில் பாலை பரிசோதனை செய்து இணையதளத்தின் மூலம் செயல்படுத்தவும், சங்கம் வழங்கும் பாலுக்கு கொள்முதல் விலையாக பசும்பால் லிட்டருக்கு ரூ.40ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.50ம் என உயர்த்தி வழங்கவும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் பிஎம்சியில் சங்கம் அனுப்பும் பாலின் தரத்தை வேண்டுமென்றே குறைத்தல், விலை குறைப்பு போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2014-15, 2016-17ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கறவை மாடு கடன்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள மானியத்தை வழங்கிடவும், அனைத்து குளிரூட்டு நிலையங்களிலும் கணினி மயமாக்கப்பட்ட பால் தரம் பார்க்கும் இயந்திரத்தை பயன்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் பால்கேன்களுடன் பால் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். கடலையூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் முகமதுஅலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராமசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: