×

மண்ணில் புதைத்திருந்த செல்போன், சார்ஜர் சிக்கியது: வேலூர் மத்திய சிறையில் பரபரப்பு

வேலூர், ஜூன் 26: வேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜரை சிறை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து செல்போன், சிம்கார்டுகள் சிக்குவதால் சிறைத்துறையினருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கண்காணிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன், சிம்கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் கஞ்சா, செல்போன் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பிளாஸ்டிக் கவரில் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 சிம்கார்டுகளை சிறை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிம்கார்டுகள் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது, அதில் தொடர்பு கொண்டு பேசிய எண்கள் குறித்து சைபர் க்ரைம் உதவியுடன் பட்டியல் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் சிறை வளாகத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் ஆகியவற்றை சிறை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அருகிலேயே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அடுத்தடுத்து செல்போன்கள் சிக்குவதால் சிறைத்துறை போலீசாதே இதற்கு உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதன்பேரில், சிறை வளாகம் முழுவதும் நவீன கருவிகள் வைத்து ஸ்கேன் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் செல்போன், கஞ்சா சோதனை செய்யும் கியுஆர்டி பிரிவில் உள்ளவர்களிடம் தகவல்களை திரட்டுவதில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் சப்ளை செய்த விவகாரத்தில் சிறை போலீசார் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது சிறையில் செல்போன் புழக்கம் அதிகரித்துள்ள விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வேலூர் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...