×

போளூரிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 2 பேர் கைது போலீசார் அதிரடி

திருவண்ணாமலை, ஜூன் 26: போளூரிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 2 பேரை போலீசார் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்தனர். போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முருகபாடி கூட்ரோடு அருகே சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் கையில் பைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து பைகளை சோதனையிட்டனர். அப்போது, அதில் கொடுவாள், வெட்டு கத்திகள் போன்றவைகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்ததில், ஜமுனாமரத்தூர் அருகே உள்ள சுத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(44), போளூர் ஜெயின்நகர் பகுதியை சேர்ந்த அபித்ஷேக்(28) என்பதும், இருவரும் குடும்ப வறுமை காரணமாக, ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட செல்ல பஸ்சுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இவர்களை அழைத்து செல்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே