×

தண்டராம்பட்டு அருகே 4 டன் வேலம், பூவரசன் மரங்கள் வெட்டி கடத்தல் லாரி உரிமையாளர், கூலி தொழிலாளர்களுக்கு வலை


தண்டராம்பட்டு, ஜூன் 26: தண்டராம்பட்டு அருகே அரசு நிலத்தில் இருந்த 4 டன் வேலம், பூவரசன் மரங்களை வெட்டி கடத்திய லாரி உரிமையாளர்கள், கூலி தொழிலாளர்களை போலீசார் தேடிவருகின்றனர். தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த வேலம், பூவரசன் மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தாசில்தார் நடராஜன், ஆர்ஐ ரமேஷ், விஏஓ அருண்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த சுமார் 4 டன் வேலம், பூவரசன் மரக்கட்டைகள் மற்றும் லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து தண்டராம்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கூலியாட்களை வைத்து மரம் வெட்டி கடத்திய லாரி உரிமையாளர் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(54) மற்றும் கூலி தொழிலாளர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...