ஓமலூர், ஜூன் 25: ஓமலூர் வட்டாரத்தில் வெளிமாநில காய்கறிகள் வரத்து அதிகரிப்பால், காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் தொடர்ந்து கொளுத்தும் வெயிலின் காரணமாக காய்கறிகள் மற்றும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது ஓமலூர் தினசரி காய்கறி சந்தைக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரத்தை விட தற்போது விலை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்கள முன்பு கிலோ ₹50க்கு விற்பனையான தக்காளி, தற்போது கிலோ ₹20ல் இருந்து ₹40வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிலோ ₹120க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் தற்போது கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது.