ஓமலூர், ஜூன் 25: சேலம், விதை ஆய்வு துறை சார்பாக, தனியார் விதை விற்பனையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. சேலம், விதை ஆய்வு துறை சார்பாக, தனியார் விதை விற்பனையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர் தலைமை வகித்து பேசுகையில், விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும். உரிய காலத்தில் விதை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ, தரமற்ற மற்றும் காலாவதி விதைகளை விற்பனை செய்தாலோ விதைச்சட்டம் 1966 மற்றும் கட்டுப்பாட்டு ஆணை 1983ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமில், விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தல், பதிவேடுகள் பராமரித்தல், உரிமங்களில் திருத்தம் செய்யும் வழிமுறைகள் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விதை விற்பனையாளர்கள் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளான, விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, விதை மாதிரி ஆய்வறிக்கை பராமரித்தல், பதிவுச்சான்று பராமரித்தல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.