ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

ஆத்தூர், ஜூன் 25: ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த மக்கள், குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் 5வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தாண்டவராயபுரம் கிராம ஊராட்சியின் மூலம் விநிோயகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில வாரங்களாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை, ஒன்றிய அலுவலகத்தில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், காலிகுடங்களுடன் ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் ரூரல் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பகுதி மக்களுக்கு விரைவில் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி முடிந்து தண்ணீர் வழங்கப்படும் எனவும், தற்போது லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ராசிபுரம்- ஆத்தூர் சாலையில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: