ஓமலூர், ஜூன் 25: சேலத்தில் செயல்படும் விதை விற்பனை கடைகளில், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் கோவை தலைமை அலுவலகத்தில் இருந்து, விதை ஆய்வு இணை இயக்குநர் சேகர், சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் நாசருடன் ஆய்வுகள் மேற்கொண்டார். சேலம் அலுவலகத்தில் விதை ஆய்வாளர்களுடன் விதை ஆய்வுத்திட்ட முன்னேற்ற அறிக்கை, விதை ஆய்வாளர்களின் பகுதி வாரியாக, அவர்களது இலக்கு மற்றும் சாதனை குறித்தான ஆய்வுகள் மேற்கொண்டனர். இதையடுத்து, விதை ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். சேலம் மாவட்டத்தில், விதை இருப்பு நிலைகளை கண்டறிந்து, பருவமழை தொடங்கும் முன்பு, தரமான விதைகள், உரிய பருவத்தில் கிடைக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், அலுவலக மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் ஆய்வுக்கு சென்ற விவரத்தினை அறிந்து, அதிக அளவில் விதை மாதிரி எடுத்து தரத்தினை உறுதி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தினார். பின்னர் கொண்டலாம்பட்டி, மெய்யனூர், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது விற்பனை நிலையங்களில் விதைகளின் இருப்பு மற்றும் விற்பனை நிலவரம், கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, விதைமாதிரி ஆய்வறிக்கை, பதிவுச்சான்று ஆகியவை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்ய ஏதுவாக உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.