×

பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் 35 வயது வாலிபருடன் ராசிபுரம் மாணவிக்கு காதல்

ராசிபுரம், ஜூன் 25: நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம்  அருகே ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள்  சீதாதேவி(19). 12ம் வகுப்பு முடித்த இவரை நீட் பயிற்சி  வகுப்பிற்காக கேரள மாநிலம்  திருச்சூருக்கு அனுப்பியுள்ளார்.  அங்கு, ராமநாதபுரம் பகுதியில்  இருந்து  பயிற்சிக்காக வந்த மாணவி ஒருவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து சென்ற உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் குள்ளன்குடி பகுதியைச் சேர்ந்த காஜாமொகிதீன்(35)  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி  சீதாதேவி திடீரென மாயமானார்.

இதுகுறித்து வரதராஜன் கொடுத்த புகாரின்பேரில், ராசிபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். அதேவேளையில், சீதாதேவி தனது காதலரை பதிவு திருமணம் செய்து கொண்டு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ராசிபுரம் போலீசார் ராமநாதபுரம் விரைந்தனர். அவர்களிடம் காதல் ஜோடி ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களை ராசிபுரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தனது காதல் கணவருடன் செல்வதாக சீதாதேவி தெரிவித்தார். இதன்பேரில், அவர் காஜாமொகிதீனுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, சீதாதேவியின் பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. நீட் பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் காதல்வயப்பட்ட 19 வயது மாணவி, பெற்றோரை புறக்கணித்து 35 வயது வாலிபருடன் சென்ற சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Rasipuram ,workshop ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து