உடுமலை, ஜூன் 25:உடுமலை- தளி சாலையில் செங்குளம் கரையோரம் உடுமலை பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 5நிலை கோபுரத்துடன் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற தோற்றத்துடன் தங்க கூரை வேய்ந்த கோபுரம் உடைய கருவறை, ராஜகோபுரம், முன்மண்டபம் என சிற்ப வேலைபாடுகளுடன் பெருமாள் கோயில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. கோயிலினுள் ஸ்ரீ வேங்கடேச பெருமாள், பத்மாவதி தயார், ஆண்டாள் தயார் ஸ்ரீலட்சுமி ஹயக்கீரிவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விக்வக்ஷேனர், ஆஞ்சநேயர் எனஅனைவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக 30ம் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் 30 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தன்று 2 ஆயிரம் கார்களை பார்க்கிங் செய்யும் வகையில் பார்க்கிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது.எல்லா பக்தர்களும் வந்து தரிசனம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் உண்டியல் எதுவும் வைக்கப்பட மாட்டாது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். அப்போது தினமும் பக்தி சொற்பொழிவு மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.இத்தகவலை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் குழுவை சேர்ந்த வேலுசாமி, அமர்நாத், ரவீந்திரன் ஆகியோர் கூறினர்.