நெல்லை, ஜூன் 25: தேவர்குளம் அருகே கோயிலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் சிக்கினர். தேவர்குளம் அருகே கூவாச்சிபட்டியில் இருளப்ப சுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோயில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். அப்போது 2 வாலிபர்கள் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். உடனே அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து தேவர்குளம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் தேவர்குளத்தைச் சேர்ந்த கண்ணன் (23), காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரைச் சேர்ந்த அரசுராஜ் (19) என்பது தெரியவந்தது. தற்போது இவர் கண்ணனுடன் தேவர்குளம் பகுதியில் தங்கியிருந்தார். இவர்களுக்கு வேறு ஏதும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.