×

சென்னை கிரைம்

* முகப்பேர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி லிங்கதுரை (21) நேற்று அதிகாலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது, லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
* தி.நகர் அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் தீனு நிஷா  (36). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். தீனு நிஷா அயனாவரத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று பயிற்சிக்கு செல்வதற்கு முன், தனது  3 சவரன் தாலி செயினை கழற்றி, அதனுடன் செல்போன், ரூ1,500 ஆகியவற்றை அவரது மொபட் பெட்டியில் வைத்துவிட்டு சென்றார். பயிற்சி முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மொபட் பெட்டியை உடைத்து தாலி, செல்போன், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

* திருவொற்றியூர் விம்கோ நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜன் (45). அதே பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* அரும்பாக்கம் வி.ஜே நகரை சேர்ந்த பிரியா (22) என்பவரிடம் 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிய ஓட்டேரியை சேர்ந்த விஜி (எ) விஜயபாஸ்கர் (24). அவரது தம்பி சூர்யா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* பெரும்பாக்கம், இந்திரா நகர், பல்லவ மன்னார் தெருவை சேர்ந்த பாலம்மா (75) நேற்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

* ஆதம்பாக்கம், நிலமங்கை நகர், அவ்வையார் தெருவை சேர்ந்த முத்துலட்சுமி (65) நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
* அடையாறு கஸ்தூரிபாய் நகர், திருவேங்கடம் தெருவை சேர்ந்த மகேந்திரன் (65), தனியார் நிறுவன காவலாளி. இவரது பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் பிடிக்கும்போது வாளி விழுந்துவிட்டது. இதனை எடுக்க முயன்ற மகேந்திரன், எதிர்பாராவிதமாக கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...