கழுகுமலை, ஜூன் 25: கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதால் ஒரு சில பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தொடர்ந்து பேரூராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் தனசிங் (விளாத்திகுளம்), சுந்தரவேல்(எட்டயபுரம்), முருகன் (சாத்தான்குளம்), ரெங்கசாமி(நாசரேத்), உஷா(கழுகுமலை) ஆகியோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் சீவலப்பேரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளான ஆறுமுகம்நகர், அண்ணாபுதுத் தெரு, ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆறுமுகநகர் பகுதியில் 12 மோட்டாரும், அண்ணாபுதுத்தெரு பகுதியில் 8 மோட்டார்கள் என 20 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாரை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் முழங்கினர்.