வேப்பூர், ஜூன் 21: வேப்பூர் அருகே சர்க்கரை ஆலை நிர்வாகம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி விருத்தாசலம்-சேலம் சாலையில் விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சித்தூரில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை இந்த ஆலைக்கு வெட்டி அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையான சுமார் 120 கோடி ரூபாயை ஆலை நிர்வாகம் வழங்காமல் ஏமாற்றியுள்ளது. இதேபோல் விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் பெயரில் 19.17 கோடி ரூபாயை வங்கியில் கடனாகவும் பெற்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம தியாகராஜனை கைது செய்யக்கோரி பல தரப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வேளாண் துறை மற்றும் காவல்துறையினரிடம் விவசாயிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தனிக்குழு அமைத்து, ஆலை நிர்வாகத்திடம் இருந்தும், விவசாயிகளிடம் இருந்தும் தனித்தனியாக அறிக்கையை பெற்றுத்தருமாறு உத்தரவிட்டது.