×

மணக்குள விநாயகர் கோயில் அருகே குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த 2 பெண்கள் கைது

புதுச்சேரி,  ஜூன் 21:  மணக்குள விநாயகர் கோயில் அருகே குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து  துன்புறுத்திய 2 பெண்களை பெரியகடை போலீசார் கைது செய்து குழந்தைகள் நல  பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்தனர்.  புதுவையில் சுற்றுலா பயணிகள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர பகுதியில் உள்ள மணக்குள  விநாயகர் கோயில், சட்டசபை, பாரதி பூங்கா, பீச் ஆகியவற்றை பார்வையிட தினமும்  ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இவற்றை குறிவைத்து சில பெண்கள்  குழந்தைகளை அனுப்பி அவர்களை பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தி வருவது  வாடிக்கையாக உள்ளது. மணக்குள விநாயகர் கோயில் முன்பு 2 குழந்தைகளுடன்  பெண்கள் நின்று கொண்டு பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக பெரியகடை  போலீசுக்கு புகார் வந்தன.

  இதையடுத்து எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார்  அங்கு விரைந்து கோயில் அருகே பிச்சை எடுத்து பொதுமக்களுக்கு தொல்லை  கொடுத்த 2 பெண்களை கைது செய்து குழந்தைகளை மீட்ட போலீசார், அவர்களை காவல்  நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்,  சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்த நிலையில் உடனே 2  குழந்தைகளையும் பெற்றோருடன் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்புக்  குழுவிடம் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர். அவர்களிடம் குழந்தைகள்  நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தீவிரமாக விசாரித்து வருகிறார்.

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து
கடலூர், ஜூன் 21: கடலூர் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் மர்ம ஆசாமிகளின் சதி செயலா என்பது குறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் புதிய கலெக்டர் அலுவலக வளாகம் அதை சுற்றி உள்ள பகுதியில் புற்கள் மற்றும் செடி கொடிகள் போன்ற அடர்ந்த புதர்கள் அடங்கிய பகுதியாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பாம்புகள் படையெடுப்பு அரங்கேறி உள்ளது. இதற்கிடையே நேற்று பிற்பகல் திடீரென கலெக்டர் அலுவலக வளாகம் பகுதியில் புதர்கள் நிறைந்த இடத்தில்  தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ பரவியதால் அதிகாரிகளும், ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து புதுநகர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மர்ம ஆசாமிகள் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது கடும் வெயில் காரணமாக புதர்கள் தானாக தீப்பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் படையெடுக்கும் நிலையிலும் புதர்கள் அகற்றப்படாததால், திடீரென நேற்று தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : women ,children ,Manakkula Ganesha Temple ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது