திருவேங்கடம், ஜூன் 21: திருவேங்கடம் பஸ் நிலையம் அருகேயுள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கூனம்பட்டி ஆதீனம் தலைமையில் விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி, தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, யாக பிரவேஷம், முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. 19ம்தேதி காலை சிவாச்சாரியார்கள் வழிபாடு, கோபுர விமான கலசம் வைத்தல், யாகசாலை பூஜைகள், மூல மந்திரம், யந்திர ஸ்தாபனம், அஷ்டமருந்து சாத்துதல் நடந்தது.
தொடர்ந்து 20ம் தேதி காலை 7 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை, காலை 9.30 மணிக்கு அங்காள ஈஸ்வரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 10 மணியளவில் கொடிமரம், அங்காளஈஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதை திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தரிசித்தினர். இதையொட்டி 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை காலையில் துவங்கிய அன்னதானம் மாலை வரை நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை மருளாடிகள் சத்திரப்பட்டி, திருவேங்கடம், வையக்கவுண்டன்பட்டி, கீழதிருவேங்கடம், எதிர்கோட்டை, ஆவுடையாபுரம், கங்கர்செவல்பட்டி, சின்னப்ப ரெட்டியபட்டி, சிவகிரி கொடிமர டிரஸ்டிகள் மற்றும் 36 கிராம பரம்பரை மறவர் சமுதாய மருளாடிகள் செய்திருந்தனர்.