களக்காட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய தொழிலாளி

களக்காடு, ஜூன் 21: களக்காட்டில் தோட்டத்து மரத்தில் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.களக்காடு சிங்கம்பத்தில் உப்பிலாங்குளம் கால்வாய் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் தூக்கில் தொங்கினார். சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். இதுகுறித்து களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சபாபதி, எஸ்ஐ ராஜமணி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் களக்காடு அருகே கல்லடி சிதம்பரபுரம் நல்லநாதபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அசரப்அலி(54) என்பது தெரியவந்தது.

அவரது இரு சக்கர வாகனத்தில் சாவியும், அவரது சட்டையில் செல்போனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த அசரப்அலிக்கு விமலா என்ற மனைவியும், ஆல்பர்ட்(29) என்ற மகனும் உள்ளனர். மேலும் அவர் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விமலாவுக்கு போன் செய்த அவர், கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். அதன்பின் அவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

Related Stories: