சங்கரன்கோவில், ஜூன் 21: சங்கரன்கோவிலில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் காமராஜர் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். கொத்தனார். இவரது மனைவி முத்துமாரி (33). தம்பதிக்கு பூபதி (12), சஞ்சய் குமார் (10), மகேஸ்வரி (8) என 3 குழந்தைகள். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியபிறகு கோமதிநாயகம் கட்டிட வேலைக்கு சென்றார். மதியம் வழக்கம்போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு 3 மணியளவில் மீண்டும் வேலைக்கு சென்றார். மாலை 4 மணியளவில் மூத்த மகன் பூபதி பள்ளியில் இருந்து வீடுதிரும்பியபோது முத்துமாரி கத்தி குத்துகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். இதை பார்த்து அலறிய பூபதியின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து வீடு திரும்பிய கோமதிநாயகம், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்து விரைந்து வந்த எஸ்பி அருண் சக்திகுமார், சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.