கோவில்பட்டி, ஜூன் 21: கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள், யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே கிளவிபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கெச்சிலாபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக இக்கிராம மக்களுக்கு சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் ரூ.5 மற்றும் ரூ.10க்கு விலைக்கு வாங்கி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இக்கிராமத்தில் உள்ள அடிபம்புகள் பழுதாகி நீண்ட காலமாகியும் இதுவரையில் சரிசெய்யப்படாமல் உள்ளதால், இவைகள் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது.