சாத்தான்குளம் அருகே நிருபருக்கு சரமாரி வெட்டு

சாத்தான்குளம், ஜூன் 21:

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழியை சேர்ந்த கணபதி மகன் முத்துவேல்(37), டிவி மெக்கானிக். நிருபராகவும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தட்டார்மடத்தில் உள்ள தனது கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (54) அரிவாளால் முத்துவேலை வெட்டினார். இதில் அவருக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து முத்துவேல் தரப்பினர் கூறுகையில், தட்டார்மடத்தை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரின் சகோதரர் கந்துவட்டி கும்பலிடம் பணம் வாங்கினார். இந்த கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார், ஸ்டூடியோ உரிமையாளரை மிரட்டினார்கள் என்றும் இதுதொடர்பாக செய்தி வெளியானதால் இன்ஸ்பெக்டர் தூண்டுதலின்பேரில் இந்த சம்பவம் நடந்ததாகவும் குற்றம் சாட்டினர்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட தட்டார்மடத்தை சேர்ந்த சண்முகநாதனை போலீசார் கைது செய்தனர். ஓட்டலில் சாப்பிட சென்றபோது முத்துவேலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டார்மடம் எஸ்.ஐ சுயம்புலிங்கம் வழக்கு பதிந்தார். டிஎஸ்பி (பொறுப்பு) பழனிக்குமார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், நேற்று முன்தினம் இரவே தூத்துக்குடி ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிருபர் மீதான தாக்குதல் மற்றும் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: