சாத்தான்குளம், ஜூன் 21:
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழியை சேர்ந்த கணபதி மகன் முத்துவேல்(37), டிவி மெக்கானிக். நிருபராகவும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தட்டார்மடத்தில் உள்ள தனது கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (54) அரிவாளால் முத்துவேலை வெட்டினார். இதில் அவருக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து முத்துவேல் தரப்பினர் கூறுகையில், தட்டார்மடத்தை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரின் சகோதரர் கந்துவட்டி கும்பலிடம் பணம் வாங்கினார். இந்த கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார், ஸ்டூடியோ உரிமையாளரை மிரட்டினார்கள் என்றும் இதுதொடர்பாக செய்தி வெளியானதால் இன்ஸ்பெக்டர் தூண்டுதலின்பேரில் இந்த சம்பவம் நடந்ததாகவும் குற்றம் சாட்டினர்.