விபத்தில் காயமடைந்த ஆசிரியர் பரிதாப பலி

புதுக்கோட்டை, ஜூன் 21: புதியம்புத்தூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹெர்பட் முத்துராஜ் (55). இவர், இங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜிலா (50), தூத்துக்குடி அருகேயுள்ள செம்புலிங்கபுரம் டயோசீசன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ஹெர்பின் (23). பொறியியல் பட்டதாரியான இவர், கால்பந்து வீரர் ஆவார்.  கடந்த 16ம் தேதி புதியம்புத்தூரில் விளையாட்டில் ஈடுபட்டபோது தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதே நாளில் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க ஹெர்பட் முத்துராஜ், புதுக்கோட்டைக்கு காரில் சென்றார். பின்னர் மகனை பார்க்க மருத்துவமனைக்கு பைக்கில் சென்றபோது புதுக்கோட்டை அருகே மீன்பதப்படுத்தும் ஆலை முன்பாக எதிரே வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஹெர்பட் முத்துராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். புதுக்கோட்டை எஸ்ஐ அந்தோணிராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: