ஏரல், ஜூன் 21: உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஊர்மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏரல் அருகே உள்ள உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அன்று காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிரம்மச்சாரி பூஜை மற்றும் தீபாராதனை, தாமிரபரணி நதியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. இரவு முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு மருந்து சாத்துதல் மற்றும் தீபாராதனை நடந்தது. முக்கிய விழாவான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து அன்னதானம், காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து அலங்கார தீபாராதனை மற்றும் மஹேஸ்வர பூஜையும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் ஊர் பக்தகோடிகள் தாமிரபரணி நதியில் இருந்து புனிதநீர் கொண்டு வருதலும், அபிஷேகம் அலங்கார தீபாராதனையும், மாலையில் முத்தாரம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் திரளான ஊர்மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம விவசாயிகள் சங்க தலைவர் நடேசன் என்ற மலப்பழம் நாடார், நிர்வாகஸ்தர்கள் சிவகுமார் நாடார், கனிராஜ் நாடார், முருகன் நாடார், பொன்ராஜ் நாடார் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.