×

தர்மபுரி அருகே கோயில் உண்டியலை உடைத்த கொள்ளையனுக்கு தர்ம அடி

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி அருகே முனியப்பன் கோயில் உண்டியலை உடைத்து திருடிய கொள்ளையனுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி சோகத்தூர் கிராமத்தில் முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள், லாரி டிரைவர்கள் முனியப்பன் சுவாமியை வழிபட்டு செல்வார்கள். நேற்று அதிகாலை கோயில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து எடுத்துக்கொண்டு ஓடமுயன்ன வாலிபரை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

கிராம மக்களை பார்த்தவுடன் உண்டியலுடன் அவன், ஓட முயன்றான். கோயில் வளாக இரும்பு கேட்டில் ஏறி குதிக்கும்போது, காலில் பலத்த அடிபட்டது. இதையடுத்து ஓடமுடியாமல் நின்றவனை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, தர்மபுரி டவுன் போலீசாரிடம், வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் உண்டியலை கைப்பற்றி, வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

கீழே விழுந்ததிலும் பொதுமக்கள் தாக்கியதிலும் காயமடைந்து மயக்கமடைந்ததால் அவனை தர்மபுரி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த மகேஷ்(48) என்பதும், இவர் மீது சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : robber ,Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்