வேலூர், ஜூன் 21: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகளுக்கு இலவச யோகா பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தனியார் யோகா மையம் சார்பில் தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை, கோவை, கடலூர், வேலூர் உள்ளிட்ட அனைத்து மத்திய சிறைகளில் யோகா வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் யோகா மைய உறுப்பினர்கள் மூலம் இன்று சிறையில் உள்ள கைதிகளுக்கு ஒரு மணி நேரம் யோகா பயிற்சி அளிக்கின்றனர். யோகா செய்வதன் மூலம் மன இறுக்கம் குறைந்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் யோகாசனம் செய்வது முக்கியம். இதன்மூலம் மன இறுக்கம் குறைவது மட்டுமின்றி தனிமனித ஒழுக்கம், ஆரோக்கியம் உட்பட யோகாவின் பயன்கள் குறித்து கைதிகளுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெறும் அனைத்து கைதிகளும் தினந்தோறும் யோகா செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.