ஈரோடு, ஜூன் 21: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 617 ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் தொழில்துறை அரசாணைப்படி விவசாயம் மற்றும் பிற பயன்பாட்டிற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 617 ஏரி, குளம், குட்டை போன்ற அரசு நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எந்தெந்த நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்கலாம் என்ற விபரத்தை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு வண்டல் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.