ஈரோடு, ஜூன் 21: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் (74). இவர், ரயில்வே ஆர்எம்எஸ் மெயில் கார்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜூலியஸ் லில்லி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். அந்தோணி தாஸ் கடந்த 18ம் தேதி அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்தோணி தாசின் மனைவி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். நேற்று காலை ஈரோடு ரயில்வே காலனி சாய்பாபா கோயில் அருகே உள்ள சாக்கடையில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சாக்கடை அருகே நடந்து வந்தபோது அந்தோணி தாஸ் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்தது.