திருவையாறு, ஜூன் 21: திருவையாறு உதவி வேளாண்மை இயக்குனர் சரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவையாறு வட்டார வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து சுற்றுவட்டார கிராமங்களில் முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நமது பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில் குறைந்த நீரில் நிறைந்த வருவாய் ஈட்ட நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மழைதூவான், தெளிப்புநீர் பாசன கருவி மற்றும் சொட்டுநீர் கருவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய ஆவணங்களை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.