அதிராம்பட்டினம், ஜூன் 21: அதிராம்பட்டினம் வழியாக செல்லும் காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதையில் உடனடியாக விரைவு ரயில் சென்னைக்கு இயக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் கப்பல் போக்குவரத்து துறைமுகமாக இருந்தபோது ரயில் சேவை துவக்கப்பட்டது. அதிலிருந்து அதிராம்பட்டினத்திற்கு சென்னையில் இருந்து 2 எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருவாரூர்- காரைக்குடிக்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாறியது. காரைகுடி- திருவாரூர் மீட்டர்கேஜ் ரயில் பாதையை 10 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு ரயில்கள் நிறுத்தப்பட்டு வேலைகள் துவங்கின. இப்போது அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு சென்ற மாதம் அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரு, சென்னை, திருச்சி போன்ற பகுதியிலிருந்து ரயில்வே அதிகாரிகள் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் சென்னைக்கு விரைவு ரயில் விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.