முசிறி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

தா.பேட்டை, ஜூன் 21: முசிறி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி தாலுகா அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அந்தரப்பட்டியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் போதிய குடிநீர் வழங்கிட சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரில் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அய்யம்பாளையத்திலிருந்து சேந்தமாங்குடி செல்லும் சாலையில் மறியல் செய்தனர். அப்போது அப்பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த சாலை அமைக்கும் பணிகளையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: