தாக்கவும் இல்லை; பண மோசடியும் இல்லை தயாரிப்பாளர் மீது ஜாக்குவார் தங்கம் புகார்

சென்னை: சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியா என்ற படத்தை எனது இரு மகன்களை வைத்து இயக்கி வருகிறேன். இதன் இந்தி டப்பிங் உரிமைக்காக அல்டாப் என்பவர் ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்தார். ஒப்பந்தப்படி ஜனவரி 26, 2020க்கு பிறகுதான் படத்தை ஒப்படைக்க முடியும் என தெரிவித்துள்ளோம். இதற்கிடையே, என்னை சந்திக்க வீட்டுக்கு வந்தபோது நான் தாக்கியதாக அல்டாப் பொய் புகார் அளித்துள்ளார்.  இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் நான் விளக்கம் அளித்தேன். சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசாரிடம் அளித்திருக்கிறேன். அல்டாப் என்னை சந்திக்க வரவே இல்லை. அவரை நான் தாக்கவும் இல்லை. இந்த ஆதாரத்தை பார்த்துவிட்டு அல்டாப்பை இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார். தயாரிப்பாளர்கள் கில்டு என் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. இது பொறுக்க முடியாமல் முன்னாள் நிர்வாகிகள் சிலரது தூண்டுதலில் அல்டாப் இப்படி செய்திருக்கிறார். பொய் தகவல்கள் கூறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: