ரயில் மோதி தொழிலாளி பலி

சென்னை:திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). தச்சு தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளார். பின்னர் வேலை முடித்துவிட்டு இரவு தென்காசி செல்வதற்காக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதன்படி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு செல்வதற்காக பூங்கா ரயில் நிலையத்துக்கு வந்த பழனிசாமி, இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில் நிலைய கழிவறைக்கு சென்றுள்ளார்.  அங்கு தண்ணீர் வராததால் தண்டவாளம் அருகே சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அங்கிருந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழனிசாமி உடலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: