திருக்கழுக்குன்றம், ஜூன் 21: திருக்கழுக்குன்றம் அன்னை சத்யா நகரை சேர்ந்த 24 இருளர் இன மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று, வீடு திரும்புவதற்கு, வட்டார வள மையம் சார்பில் வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அன்னை சத்யா நகரில் ஏராளமான இருளர் இன குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கிருந்து 24 மாணவ, மாணவிகள் சுமார் 2 கிமீ தூரமுள்ள திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய வடக்கு நடுநிலைப் பள்ளியில் படிக்கின்றனர். தினமும் அன்னை சத்யா நகரில் இருந்து மாணவ, மாணவிகள், பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய ஏரிக்கரையின் மீது பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். மழை, வெயில் காலங்களிலும் கடும் சிரமத்துடன் அவர்கள் சென்று வந்தனர். இந்நிலையில், இருளர் இன மாணவ, மாணவிகளின் சிரமத்தை போக்கும் விதமாக, வட்டார வளமையம் சார்பில் ஒரு வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், தினமும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.