திருப்போரூர், ஜூன் 21: கடந்த 4 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் நாவலூர், கேளம்பாக்கம், சிறுசேரி, கோவளம் ஆகிய பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்தது. சிறிது நேரம் மட்டுமே மழை, தூறல் விழுந்தது. பின்னர் மெல்ல வலுப்பெற்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கனமழை பெய்தது. இந்த திடீர் மழையினால் பழைய மாமல்லபுரம் சாலையில் கந்தன்சாவடி முதல் கேளம்பாக்கம் வரை வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால் போக்குவரத்து பாதித்தது.குறிப்பாக பெருங்குடி மற்றும் ஏகாட்டூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இந்த மழை தொடர்ந்து 2 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பினால் இந்தாண்டு வேளாண்மை சிறப்பாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டாலும், லேசான தூறல் மட்டுமே விழுந்தது. இருப்பினும் பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.