திருத்தணி, ஜூன் 21: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சூர்யநகரம் ஊராட்சி செயலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சி செயலராக பணியாற்றுபவர் ஆதிகேசவன் (44). இவர், ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார் வந்தது. மேலும், இரு நாட்களுக்கு முன், அந்த ஊராட்சிக்கு உட்பட்ட தெக்களூர் காலனி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இரு மாதங்களாக சரியான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும், ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி விசாரணை நடத்தி ஊராட்சி செயலர் ஆதிகேசவனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதேப்போல், திருத்தணி ஒன்றியத்தில் உள்ள தாடூர், வீரகநல்லூர் மற்றும் வேலஞ்சேரி ஆகிய மூன்று ஊராட்சிகளின் செயலர்களையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.