கமுதி, ஜூன் 19: கமுதி-சாயல்குடி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஷேர் ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வேன்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை நடப்பதுண்டு. இது சந்தைப்பேட்டையில் நடைபெறும். இதன் ஒரு பகுதியில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கமுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமானோர் வருகின்றனர்.கமுதி-சாயல்குடி மெயின் ரோட்டின் அருகே சந்தைபேட்டை உள்ளதால், ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் அவற்றை கொண்டு செல்ல ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வேன்களை வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். இதனால் மெயின் ரோட்டில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் இதன் அருகே தனியார் பள்ளி உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கும் இடையூறு உள்ளது. எனவே ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வேன்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் ஒதுக்கி தந்து பேரூராட்சி நிர்வாகம் இதனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.