ஜெனகை மாரியம்மன் கோயில் விழாவில் பால்குடம்,அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
சோழவந்தான், ஜூன் 19: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று வைகையாற்றில் நீராடிய பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியாக பால்குடம், அக்னி சட்டி, கரும்பு தொட்டிலுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்திப் பரவசத்துடன் வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகத்தினர் இயக்கினர். திருவிழாவில் தொடர்ச்சியாக இன்று மாலை பூக்குழி இறங்குதலும், 25ம் தேதி காலை தேரோட்டமும், 26ம் தேதி இரவு வைகையாற்றில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.