திருவெறும்பூர், ஜூன் 20: திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம உதவியாளர்களை தன்னிச்சையாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பணி மாற்றம் செய்த தாசில்தாரின் செயலை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் புதிய தாசில்தாரிடம் முறையிட்டதோடு கலெக்டரை சந்திக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவெறும்பூர் தாசில்தாராக பணிபுரிந்த அண்ணாதுரை மணல் லாரி உரிமையாளர்களிடம் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்துக்கொள்வதற்கு பேரம் பேசிய செல்போன் உரையாடல் சமூகவலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி கலெக்டர் சிவராசு அதிரடியாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை 15ம்தேதி மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மருங்காபுரி தாசில்தார் தாசில்தார் ரபீக் அகமது என்பவரை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் திருவெறும் தாசில்தாராக இருந்த அண்ணாதுரை 13ம் தேதியே கிராம நிர்வாக உதவியாளர்களை பணியிட மாற்றம் செய்ததாக 16ம் தேதி ஆணை வெளியிட்டுள்ளார். அதன்படி கிளியூர் கிராம உதவியாளராக வேலை செய்த பெருமாள் நவல்பட்டிற்கும், சூரியூர் வடிவேல் குண்டூருக்கும், குண்டூர் விசுவநாதன் அசூர் கிராமத்திற்கும், அசூர் டேவிட் ராஜா பழங்கனாங்குடிக்கும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.