கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.கும்பகோணம் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கும்பகோணம் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் குடிநீருக்காக போடப்பட்ட சிறிய குழாய்களை அகற்றி விட்டு நகர பகுதியில் பதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.கும்பகோணம் நகர பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் மருத்துவமனைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் என அனைத்தும் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கும்பகோணம் நகர பகுதியில் குடிநீர் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், கும்பகோணம் நகரத்துக்கு குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் 5 ராட்ஷத போர் போட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து ராட்ஷத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வளையப்பேட்டை நீர்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகருக்குள் இருக்கும் 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் மூலம் கும்பகோணம் நகரில் 15,000 இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது தினந்தோறும் 1.20 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சொற்ப அளவில் தான் குடிநீர் வழங்க முடிகிறது. கடந்த காலங்களில் நிமிடத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் வழங்கிய நிலையில் கடந்த 5 நாட்களாக தினம்தோறும் 7 ஆயிரம் லிட்டர் குடிநீர் வருவதை வழங்குவதற்கே குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.