கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் அடுத்த கீழக்கொற்கை அம்பேத்கர் நகர் பூக்கொல்லையை சேர்ந்த சின்னதுரை மனைவி ஆராயி (60). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கியவாறு ஆராயி இருந்தார். இதையடுத்து கும்பகோணம் மருத்துவமனைக்கு ஆராயியை மீட்டு அவரது தம்பி ஏழுமலை கொண்டு சென்றார். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆராயின் உடலை கீழக்கொற்கையில் உள்ள தனது வீட்டில் ஏழுமலை வைத்திருந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் ஆராயி மகள் உமா மற்றும் மகன் விஜய் புகார் செய்தனர். அதில் ஆராயியை அடித்து கழுத்தை நெரித்து உறவினரே கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளத்தில் விழுந்த முதியவர் பலி: கும்பகோணம் ஆரோக்கியநகரை சேர்ந்தவர் அன்வர்பாட்சா (57). இவர் நால்ரோட்டில் உள்ள ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 12ம் தேதி தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொபட்டில் சென்றார். ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் குடிநீர் குழாய்க்காக பாதுகாப்பில்லாமல் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அன்வர் பாட்சாவை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.