காரைக்கால், ஜூன் 19: காரைக்கால் மாவட்ட அரசு அலுவலகங்களில் தாமதமாக வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா எச்சரித்துள்ளார்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில், அரசு ஊழியர்கள் நேரத்தோடு வருவதில்லை. அப்படியே வந்தாலும், நினைத்த நேரங்களில் அரசு அலுவலகத்தை விட்டு வெளியேறுவதுமாக உள்ளனர். இதனை முறைப்படுத்த வேன்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தது. அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா கடந்த சில நாட்களாக அரசுத்துறை அலுவலங்களில் திடீர் ஆய்வு நடத்தி வந்தார். நேற்று மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது பல ஊழியர்கள் வராதது தெரியவந்தது. குறித்த நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு குறிப்புகள் அனுப்பவும், குறித்த நேரத்தில் வராத மற்ற ஊழியர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பணி நேரத்தில் ஊழியர்கள் வெளியே செல்ல நேரிட்டால், துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் மூவ்மெண்ட் ரிஜிஸ்டரில் எழுதி வைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வு குறித்து கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறுகையில்,இனி ஒவ்வொரு அரசு துறைகளிலும் தாமதமாக ஊழியர்கள் வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 75 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். என்றார்.