×

ஆதி திராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர், ஜூன் 19: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நல கல்லூரி மாணவர் விடுதி 1, கல்லூரி மாணவியர் விடுதி 1, பள்ளி மாணவர் விடுதிகள் 10, பள்ளி மாணவியர் விடுதிகள் 7 என மொத்தம் 19 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகின்றன.10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இலவசமாக 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலுவோருக்கு சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கிகள் வழங்கப்படுகின்றன.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கிமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் அல்லது மாவட்ட அலுவலகத்தில் நாளை 20ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட அலுவலகத்தில் ஜூலை 3ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதுவும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.கரூர் கலெக்டர் அறிவிப்பு

Tags : Adi Dravidar ,hotels ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை