அண்ணாநகர்: அயனாவரம் அம்பேத்கர் நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அயனாவரம் பால்பண்ணை அருகே உள்ள நியாயவிலை கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
நீண்ட தூரம் அலைய வேண்டி உள்ளதால் முதியோர், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபற்றி வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதன், சென்னை மாநகராட்சியில் மனு அளித்தார். இதையடுத்து, ₹11.5 லட்சம் மதிப்பில் அப்பகுதிக்கு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ ரங்கநாதன் புதிய கடையை திறந்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். விழாவில், திமுக பகுதி செயலாளர் வாசு மற்றும் வட்ட செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.