×

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயிலில் அம்மன் தாலி, உண்டியல் பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

கலசப்பாக்கம், ஜூன் 19: கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயிலில் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.கலபாக்கத்தில் திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோயிலை குருக்கள் பூட்டிவிட்டு ெசன்றனர்.நேற்று காலை 6.30 மணியளவில் வழக்கம்போல் குருக்கள் கோயில் நடைதிறக்க வந்தார். அப்போது, கோயில் கொடிமரம் முன் நந்தியின் எதிரே உள்ள ஜன்னல் மற்றும் 2 உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதி மக்களுக்கும், கலசபாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மர்ம ஆசாமிகள் கோயில் வளாகத்தில் உள்ள மின்இணைப்பை பயன்படுத்தி, ஜன்னலை வெல்டிங் மெஷின் மூலம் அறுத்து, கோயில் பிரகாரத்திற்குள் சென்றது தெரியவந்தது. மேலும், கோயிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம், அம்மன் சன்னதி பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை திருடிச்சென்றது தெரியவந்தது.கடந்த தை மாதம் நடந்த ரதசப்தமி விழாவிற்கு பிறகு கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கடந்த 5 மாதங்களாக காணிக்கை பணம் எண்ணப்படவில்லை. எனவே, உண்டியலில் ஏராளமான பணம் இருந்திருக்கலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இதுகுறித்து கோயில் நிர்வாகி துரைப்பாண்டியன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Amman Dali ,Kalasakkam Thirumamudeeswarar Temple ,
× RELATED திருக்கோவிலூர் அருகே பரபரப்பு:...