வந்தவாசி, ஜூன் 19: வந்தவாசி ஜமாபந்தியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மேளம் கொட்டி, பானையுடன் வந்து விறகு வெட்டும் தொழிலாளர்கள் நேற்று மனு அளித்தனர். வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் ஓசூர் செல்லும் சாலையில் சுமார் 45க்கும் அதிகமான விறகு வெட்டும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கடந்த 30 வருடத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம், குட்டை புறம்போக்கு இடம் என்பதால் இவர்கள் பல முறை பட்டா வழங்க கோரியும் வருவாய் துறையினர், பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மேளம் அடித்து, கையில் பானையுடன் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் மாவட்ட கலால் உதவி ஆணையாளர் தாஜ்தீனிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று வேறு இடம் தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.