ஈரோடு, ஜூன் 19: ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங், தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிரிண்டிங் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தி வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பறக்கும்படை அலுவலர்களால் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து இரவு நேரங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.