×

சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 3 ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, ஜூன் 19:  ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங், தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிரிண்டிங் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தி வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பறக்கும்படை அலுவலர்களால் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து இரவு நேரங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.  

அதன்படி, வெண்டிபாளையம், பெரியசேமூர், வைராபாளையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 2 சலவை ஆலைகள், ஒரு சாய தொழிற்சாலை பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக இயக்காமல் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் நீர்நிலைகளில் விதிமுறை மீறி வெளியேற்றினால் அந்த தொழிற்சாலைகள் மீது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு