மதுரை, ஜூன் 18: மதுரை நகரில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாய்ந்து, பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிப்பாளையம், ஆரப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசாரின் சார்பில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் சிறிதளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாட்டுத்தாவணி, கே.கே நகர் உள்ளிட்ட சில இடங்களில் சிக்னல் கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.மேலும் முக்கிய இடங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் கூடுதலாக நிறுத்தப்படுவதில்லை. இதனால் சிக்னல்கள் கண்காணிப்பு இல்லாமல் உள்ளன. பல இடங்களில் இருக்கும் சிக்னல்களில் உள்ள வண்ணங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியவில்லை. இதில் உரிய பல்புகளை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பல்வேறு காரணங்களால் செயல்பாடின்றி முடங்கி கிடக்கும் சிக்னல்களை உடனடியாக சரி செய்யவேண்டும். சில இடங்களில் சரியாக இயங்காமல் இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது.