திருச்சியில் சுவாரஸ்யம் 2வது திருமணம் செய்ய விரும்பி திருமணமான பெண்ணிடம் 25 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை பறிகொடுத்த ஓய்வு ரயில்வே ஊழியர்

திருச்சி, ஜூன் 18: இரண்டாவது திருமணத்திற்கு பார்த்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் பெண்ணிடமிருந்து 25 பவுன் நகை மற்றும் ரூ.20லட்சத்தை வாங்கித்தரும்படி திருச்சி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தார்.சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்ததை அடுத்து, இரண்டாவது திருமணத்தை நிறுத்தி, நகை பணத்தை கேட்ட தனக்கு அப்பெண் கொலை மிரட்டல் விடுவதாகவும், தன்னிடம் வாங்கிய 25 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தார்.திருச்சி, கல்லுக்குழி ரயில்வே காலனியை சேர்ந்தவர் குஞ்சு மகன் வீரமணி (59). இவர் தெற்கு ரயில்வேக்குட்பட்ட திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கலாசியாக (செஞ்சர்) பணியாற்றி கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இவரது மனைவி கடந்த 1986ல் இறந்து விட்டார். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பிய வீரமணி, புரோக்கர்கள் மூலமாக வரன் தேடி வந்தார். சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ், டாக்டர் நடேசன் ரோடு பகுதியை சேர்ந்த சையத்ரஹ்மான்-ஜீனத் ஆகியோரின் மகள் ரேஸ்மா பேகம் என்பவர், வீரமணியை திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். ஆனால், ரேஸ்மாபேகம் தன்னிடமிருந்து 25 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக வீரமணி திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று மனு அளித்தார்.

இதுகுறித்து வீரமணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ரேஸ்மாபேகம் என்னை திருமணம செய்து கொள்வதாக கூறியதால் அவரை நம்பி பல்வேறு தேதிகளில், வங்கி மற்றும் ஏடிஎம் மூலம் ரூ.20 லட்சம் பணத்தை ரேஸ்மாபேகம் மற்றும் அவரது தாய் வங்கி கணக்குகளுக்கு செலுத்தினேன். நான் பணம் செலுத்தியதற்கான டெபாசிட் சிலிப்புகள் என்னிடம் உள்ளது. மேலும் 25 பவுன் நகை போட வேண்டும் என கேட்டதால், அதையும் வாங்கிக் கொடுத்தேன். தவிர தங்கத்தில் ரூ.98 ஆயிரத்துக்கு கொலுசும் எடுத்துக் கொடுத்தேன். கடந்த ஏப்ரல் 17ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையில், ரேஸ்மாபேகம் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் விவரம் எனக்கு தெரியவந்தது. இதனால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு ரேஸ்மா பேகத்திடம் கொடுத்த பணம், நகையை திரும்ப தரும்படி கேட்டேன். பணம், நகையை தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என என்னை மிரட்டுகிறார். எனவே எனது நகை, பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: