3 ஆண்டாக தொடர்பில் இல்லை

திருச்சி, ஜூன் 18: சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கச்சென்ற கணவரை மீட்டுத்தர வேண்டுமென துறையூரை சேர்ந்த பெண் திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.திருச்சி மாவட்டம் துறையூர் கோவிந்தபுரம் மேற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி மகேஸ்வரி (40). இவரது மகள் புவனேஸ்வரி (17), மகன் மகேந்திரன் (15) மற்றும் உறவினர்களுடன் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் சிவராசுவிடம் கண்ணீர் மல்க அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூரில் உள்ள ஆனைமுகா டிராவல்ஸ் ஏஜென்டுகள் சுரேஷ், ராஜேந்திரன், ராஜா ஆகியோர் ரூ.2 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஆடு மேய்க்கும் வேலைக்காக எனது கணவர் முருகேசனை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை கணவரிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. அவர் உயிருடன் உள்ளாரா, இல்லையா என தெரியவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட ஏஜெண்டிடம் கேட்டால் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகும்படி கூறுகின்றனர். நாங்கள் வறுமை நிலையில் உள்ளோம். எப்படி நாங்கள் தூதரகத்தை தொடர்பு கொள்வது. எனவே எனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: